உலகப்பார்வை

மக்களாட்சி திரும்பவேண்டும் என்று மியான்மா நாட்டு மக்கள் அண்மையில் மேற்கொண்ட போராட்டம் ராணுவ ஆட்சி-யால் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டு விட்டது. கடந்த 45 ஆண்டு காலமாக நடைபெறும் ராணுவ ஆட்சியின் கீழ் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்த நிலையில் உள்ளது. 90 விழுக்காட்டுக்கும் மேலான மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாடுகின்றனர். மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் சரியான உணவின்றி நோய்வாய்ப்படும் நிலையில் உள்ளனர். தனி நபர் சராசரி வருவாயோ, ஆசியாவிலேயே மிகக் குறைந்த அளவில், 175 அமெரிக்க டாலர்களாக உள்ளது.
ஆனால் இந்நாட்டின் ராணுவ அரசோ, நான்கரை லட்சம் வீரர்களைக் கொண்ட தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய-தொரு ராணுவத்தைப் பெற்றுள்ளது. நாட்-டின் மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்கு இந்த ராணுவத்திற்காகவே செலவிடப் படு-கிறது என்னும்போது, நாட்டில் என்ன முன்னேற்றப் பணிகள்தான் நடைபெறும்?
யாங்கோனுக்கு வடக்கே 250 மைல் தொலைவில் மலேரியா காய்ச்சல் மலிந்த காடுகளின் இடையில் நே பு தா என்னும் இடத்தில் ஒரு புதிய தலைநகரை ராணுவ அரசு உருவாக்கி வருகிறது. தேவையற்ற இந்த புதிய தலை நகரை உருவாக்க நாட்டின் வருவாயில் பெரும் பகுதி வீணே செலவிடப்படுகிறது. இப் புதிய தலைநகர் தங்களுக்கு தக்க பாதுகாப்பு அளிக்கும் என்று ராணுவ சர்வாதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர் போலும்.
எந்த வித முன் அறிவிப்புமின்றி ஆகஸ்ட் மாதத்தில் டீசல் போன்ற பெட்ரோலியப் பொருள்களின் விலையை ராணுவ ஆட்சி இரு மடங்காக உயர்த்தியது; இயற்கை எரிவாயு-வின் விலையை அய்ந்து மடங்காக உயர்த்தி-யது. அத்தியாவசியப் பொருள்களின் விலையும், பொதுப்போக்குவரத்துக் கட்டணங்-களும் கட்டுப்பாடற்ற முறையில் உயர்ந்தன. முன்னமேயே வறுமையில் வாடும் மக்களை இந்த விலை உயர்வுகள் வெறுப்-படையச் செய்தன. இதன் காரணமாகவே அண்மையில் போராட்டங்கள் நடை-பெற்றன.
இதற்கு முன் 1988 இல் இது போன்று, மக்களாட்சி வேண்டி மேற்கொள்ளப்பட்ட போராட்டமும் இரும்புக் கரம் கொண்டு அடக்கப்பட்டது. 20 ஆண்டு களுக்குப் பின் ராணுவ ஆட்சியின் கொடுமைகள் தாங்க முடியாமல் மறுபடியும் ஒரு போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் இதில் ஒரு புதிய திருப்பமாக, இந்தப் போராட்டத்திற்கு புத்த பிட்சுக்கள் ஒட்டு மொத்தமாக ஆதரவு அளித்துள்ளனர்.
என்றாலும் ராணுவ ஆட்சி போராட்டக்-காரர்களைக் கைது செய்து சிறையில் அடைத்தும், வன்முறைத் தாக்குதல் நடத்தி-யும் போராட்டத்தை அடக்கி விட்டது. போராட்டத்தில் புத்த பிட்சுக்கள் பங்கு கொள்ள இயலாதவாறு அவர்கள் தங்கள் மடாலயங்களிலேயே முடக்கப்பட்டு-விட்டனர். இனி ஒரு போராட்டமோ, புரட்சியோ அண்மையில் தலை எடுப்பதற்-கான நம்பிக்கையோ, அறிகுறியோ இல்லை.
இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவியான அவுங் சான் சூ கி என்பவர் கடந்த 12 ஆண்டுகளாக அவரது இல்லத்திலேயே சிறை வைக்கப்பட்டுள்ளார். அண்மையில் வெடித்த போராட்டத்தை அடக்கிவிட்ட ராணுவ ஆட்சி சர்வதேச நாடுகளின் கவனத்தை திசை திருப்ப சூ கி அம்மையாருடன் பேச்சு-வார்த்தை நடத்தப் போவதாக அறிவித்-துள்ளது. என்றாலும் அவரை இல்லச் சிறையிலிருந்து விடுவிக்க ஆட்சி தயாராக இல்லை.
சர்வதேச நாடுகள் மியான்மா நாட்டில் மக்களாட்சி மலரச் செய்யப்பட வேண்டும் என்று கோரியுள்ளன. அய்க்கிய நாடுகள் அவை இந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என்று மிரட்டல் விடுத்-துள்ளது. ஆனாலும் பாதுகாப்பு அவையில் வீட்டோ அதிகாரம் பெற்றுள்ள சீனாவும், ரஷ்யாவும் ஆதரவாக உள்ளவரை ராணுவ ஆட்சிக்கு எந்த பாதகமான செயலையும் அய்க்கிய நாடுகள் மன்றம் மேற்கொள்ள முடியாது. அமைதியாகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மியான்மார் ராணுவ அரசுக்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. ஆனால் மக்களாட்சி நாடான இந்தியாவோ எந்த விதமான கண்டனமும் தெரிவிக்காமலும் அமைதி காப்பது மட்டுமன்றி, ராணுவ ஆட்சிக்கு ஆயுதங்கள் அளிக்கவும் தயாராக உள்ளது.
இன்னும் எத்தனை நாள்களுக்கு மியான்மா மக்கள் இத்தகைய சர்வாதிகார ராணுவக் கொடுங்கோல் ஆட்சியில் துன்புறப் போ-கின்றனர்? எப்போது அவர்களுக்கு விடிவு காலம் பிறக்கப்போகிறது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

|