கவிதை
குழந்தையும் தெய்வமும்
குழந்தைகள் சில
குப்பைத் தொட்டிக்கு வருகின்றன
தவறான உறவால்
த()யார் ஆனதால்
ஆண்டவன் அவதாரமெடுத்த
அத்தனை புராணங்களிலும்
இதே இழிநிலைதான்
மணமாகாத குந்தி
மனமார சூரியனைக் கலந்து
குட்டிக் கர்ணனைப் பெற்றெடுத்து
பெட்டிக்குள் வைத்து மிதக்கவிட்டாளாம்.
சீதையிருந்ததும் பெட்டியில்தான்
வள்ளி கிடந்ததோ தினைப்புலத்தில்
அனாதைக் குழந்தையாய்
ஆண்டாள் கிடந்தாளாம்
துளசிச் செடியின் அடியில்
பூசிக்கப்படுகின்ற
புராணக் குழந்தைகள் யாவும்
பெற்றோர் பெற்றதல்ல.
அக்கினியில் பிறந்தாளாம்
அய்வரை மணந்த பாஞ்சாலி
பாரதக் கதைப் பாத்திரமான பாண்டவர்கள் அய்வரும்
சொந்தத் தந்தையின் புத்திரர்களல்ல.
எவர் எவரையோ விரும்பி
ஈன்ற பிள்ளைகள்
அயோத்தி ராமனும் அவன் சோதரரும்
தசரதனின் தனயன்கள் அல்ல.
காவி முனிவன் அவியுணவு பெற்று
கருத்தரித்துப் பெற்றதுதான்.
குழந்தையை அறுத்து கறி சமைக்க
ஆண்டவன் விரும்பிய (அ)சைவ மண்ணில்
தெய்வக் குழந்தைகள் பிறப்பின்
ஆபாசம், அபத்தம் அறிவீர்களா?
சபரிமலைக் குழந்தை
ஆணும் ஆணும் சேர்ந்ததில் பிறந்தததாம்.
பழனி மலைக் குழந்தை
தாயில்லாமல் தந்தை நெற்றியில் தோன்றியதாம்
தன் குழந்தையைத்
தாரமாக்கினான் பிரம்மா
தொழிலாளி குழந்தை
குழந்தைத் தொழிலாளி
அஞ்சு வயசுப் பிஞ்சுக் குழந்தைகள்
கஞ்சிக்காக பெஞ்சு துடைக்கும்
கொடுமையை மாற்றுவோம்.
குழந்தையைக் காப்போம்.
- சி. விநாயகமூர்த்தி, திருச்செந்தூர்
இராமர் பாலம் தூரத் தெரியும், பாறை
மலைகள் எல்லாம்
ஏதோ ஒரு உருவம் போல் தெரியும்!
கண்ணில் பிம்பமாய் தெரிவதெல்லாம்
இது கடவுளின் அவதாரம் என்றால்
கருத்துக் குருடர்களுக்கு,
மலைகளே கோபுரங்களாகுமா?
கடலினுள் பாலம், கண்ணுக்குத்தான் தெரியுமா?
அயோத்திக்கும், இராமேசுவரத்திற்கும்,
இடையில்,
ஆயிரமாயிரம் ஆறுகள், நதிகள்...
அங்கெல்லாம் இல்லை
இராமர் பாலம்?
சேது சமஸ்த்தானத்து பனைச் சுவடியில்
பதிய வில்லை அந்த பாலம்?
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைக்க,
பாடு பொருள் கண்ட பாரதிக்கு,
படவில்லை இராமர் பாலம்?
உள் காயத்திற்கு கட்டுப் போடும் வேலையை
காரியமாக்கிக் கொண்டிருக்கிறது,
மதவாதம்
மிதந்தால் மட்டும் கப்பல் கரை சேராது?
காற்றின் திசையும் தேவை....!
அந்தக்காற்று,
கரை மட்டுமே அறியும்,
கடலின் பாலம் அறியாது!
- கோவை அன்பு
நெருப்புத் துளிகள்
காறித் துப்பு
மம்மி முகத்தில்
அம்மா என்று.
கருவறை வைத்திருப்போர்
கருவறைக்குள் போகக்கூடாதா?
அநியாயம் அய்யப்ப சாமியோவ்
வயல் மனை வீடு
நிம்மதி இல்லை
பயிர்களின் சாபம்
ஓங்கியடிக்கும் பூ
உடைந்து சிதறும் பாறை
கல்லுடைக்கும் குழந்தை
ஆடும் கிளை
அமைதியில் வேர்
அடித்தளம் அலட்டுவதில்லை
ஒதுக்கிவையேண்டா மடையா
சேரிக்குள் நுழைந்த
தென்றலின் தீட்டை
குடிசை வீதி
அம்மணக் குழந்தைகள்
மினி அழகிப் போட்டி
சுருங்கட்டும் சுவாச உறுப்பு
விசமாகட்டும் ஆக்சிஜன்
மரம் வெட்டிகளுக்கு
பிணமாய் ஜாதிவெறியின்
பிரம்பால் அடிக்கிறான் கோபம்தீர
டண்டனக்கு... டண்டனக்கு...
தெம்பிழந்த கைகள்
பட்டினியில் பறையடித்தால்
எவனும் கேட்பான் மாட்டிறைச்சி
பசிக்கும் குழந்தை
பாலுக்கழுகிறாள் தாய்
வறுமை உறிஞ்சிய மார்புகள்
முன்னிருக்கையில் நீ
பின்னிருக்கையில் நான்
கதறியழும் கவிதைகள்
- மா. மீனாசுந்தர் |