தலையங்கம்
தந்தை பெரியார்
ஆசிரியர் பதில்கள்
இந்துத்துவா
எப்படி?
மனிதர்
கவிதை
மொழி பெயர்ப்புச்
ஹாலிவுட் கலை - 13
அறிவியல்
அணு அணுவாய்
தமிழர்கள் மீதான
நூல் அறிமுகம்
பெரியார் மணியம்மை
வடபுலம்
கற்பனை உரையாடல்
பதிலடி
பெட்டிச் செய்திகள்

 

 

தலையங்கம்

ஈழச்சிக்கல்: சிங்கள அரசின் ஏமாற்று வித்தைக்கு அடிபணியலாமா?

இலங்கையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து என்று அறிவித்து, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் கொடுமை; சொந்தக் குடி மக்கள் மீதே விமானங்கள் மூலம் குண்டு வீசி தமிழர் இனப்படுகொலையைத் தயக்கமின்றி, மிகவும் மூர்த்தண்யமான முறையில் நித்தம் நித்தம் செய்து வருகிறது சிங்கள இராஜபக்சே அரசு.
தமிழக மீனவர்கள் சென்று மீன்பிடிக்கும் பகுதிகளில் இலங்கை இராணுவம் கண்ணிவெடிகளை வைத்துள்ளது. இலங்கை அரசின் குரூரம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதற்கு இது ஒன்று போதாதா? கடல் எல்லையில் கோடு கிழித்து மீனவர்கள் பயணத்தை வரையறுக்க இயலுமா? இந்தியாவின் இறையாண்மைபற்றி எல்லாம் நீட்டி முழங்கக் கூடியவர்கள் இலங்கை அரசின் இந்த நடவடிக்கை குறித்து மவுனம் சாதிப்பது ஏன்? ஒரு இனத்தை அழிப்பதில் சிங்கள அரசு நடந்து கொள்வதுபோல வேறு எங்கும் இதுவரை நடந்ததில்லை என்று கூறும் அளவுக்கு கொடுமைகள் மூர்க்கத்தனமாக நடப்பதை மறுக்க முடியுமா?
இந்த மனித உரிமைப் பறிப்புகளைக் கண்டு உலகமே கொதித்தெழுந்து, இராணுவத் தீர்வின் மூலமாக ஈழத் தமிழர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாது, மாறாக, அரசியல் தீர்வுதான் அதற்குள்ள ஒரே வழி என்று நார்வே, ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகள் மட்டுமின்றி, கனடா, அமெரிக்கா, பிரான்ஸ் முதலிய அய்ரோப்பிய நாடுகளும் கூறத் தொடங்கி விட்டதோடு, கொடுக்கும் உதவிகளும் நிறுத்தப்படக் கூடும் என்று குறிப்புக் காட்டி விட்டனர்.
இதன் விளைவாகவே உலகத்தார் கண்களில் மிளகாய்ப் பொடித் தூவுவது போல ஒரு தீர்வை, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளின் குழுவின் தலைவர் அமைச்சர் தீசர் என்பவர் ஒரு பரிந்துரை அறிக்கை தந்துள்ளார்!
இது உண்மையில் இலங்கையின் அனைத்துக் கட்சிக் குழுக்களின் கருத்தறிவிப்பு அல்ல; மாறாக ஆளுங் கட்சி கூட்டணிக்குழுவின், அதாவது அதிபர் இராஜபக்சே அரசின் அறிக்கைதான் - புண்ணுக்குப் புனுகு பூசித் தடவிக் கொடுப்பது போல கொடுக்கப்பட்டுள்ளது - என்பதை உலகத்தார் பலருக்கும் புரிய விடாமல் ஊடகங்கள் செய்யும் வேதனை மிக்க நிலை உள்ளது.
இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தப் படியான தீர்வுகூட இதில் இல்லை என்பதை மத்திய அரசின் வெளி உறவுத்துறை ஏனோ கவனிக்கத் தவறிவிட்டு, `இந்த மாயமான் வேட்டையில் இந்தியாவும் சிக்கிக் கொண்டு இதனை வரவேற்றிருக்கிறது!
உருப்படியான, வடக்கு மற்றும் கிழக்கு வாழும் - தமிழர் உரிமைகளைத் தரக்கூடிய தீர்வும் அல்ல இது; அங்குள்ள விடுதலைப் புலிகளை மட்டுமல்ல; பல முக்கிய அரசியல் கட்சிகளையும் அழைக்கவில்லை. 17 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்புகளுக்கும் அழைப்பு இல்லை; கருத்துக் கேட்கப்படவும் இல்லை. இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான அறிக்கையை 23.1.2008 அன்று இலங்கைக் குடியரசுத் தலைவர் மகிந்த இராசபக்சேவிடம் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கொண்ட குழுவின் தலைவரான அமைச்சர் தீசர் அறிக்கை ஒன்றினைக் கொடுத்துள்ளார்.
1) 1987-ஆம் ஆண்டின் இலங்கை இந்திய உடன்பாட்டுக்கு அமைய, இலங்கை அரசியலமைப்பின் 13-ஆவது திருத்தத்தை அப்பொழுது இலங்கை நாடாளுமன்றம் நிறைவேற்றியது. அந்த 13-ஆவது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுமாறு அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
2) தமிழரின் மரபு வழித் தாயகமான வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை 1987-ஆம் ஆண்டின் இலங்கை இந்திய உடன்பாட்டுக்கு அமைய இணைத்து ஒரே மாகாணமாக்கியமை சட்ட வலுவற்றது என இலங்கையின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள தால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தனித் தனி மாகாணங்களாகக் கருதி இரு மாகாண அவைகளை அமைக்குமாறு அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
3) கிழக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தக்கூடிய அமைதிச் சூழ்நிலை இருப்பதால், உடனடியாகக் கிழக்கு மாகாண அவைத் தேர்தலை நடத்துமாறு அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
4) வடக்கு மாகாணத்தில் அமைதிச் சூழ்நிலை இல்லையாதலால், பாராபட்சமற்ற முறையில் தேர்தலை நடத்த வாய்ப்பில்லாத சூழ்நிலையில், அந்த மாகாணத்தை நன்றாக அறிந்தோர் கொண்ட இடைக்கால ஆட்சி அவை ஒன்றைக் குடியரசுத் தலைவர் அமைக்கவும் அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
5) சட்டவாக்கம், ஆட்சி என்பனவற்றில் அதிகாரங்களை 13ஆவது திருத்தத்துக்கமைய மாகாண அவைகளுக்குப் முழுமையாகக் கொடுக்கவும், போதுமான நிதி ஆதாரங்களை வழங்கவும், மாகாணத்துறைகளின் வளர்ச்சித் திட்டங்களுக்கு உரிய நிதியை அந்தந்த அவைகளே முழுமையாகச் செலவு செய்யவும், ஆட்சி மொழியாக தமிழை நடைமுறைக்குக் கொண்டுவரவும், தமிழ்மொழி தெரிந்த காவலர், நீதிமன்றங்களில் தமிழ்மொழிபெயர்ப்பாளர் போன்ற பதவிகளைத் தேவைக்கேற்ப ஏற்படுத்தியும், நிரப்பியும் தமிழர் உரிமைகளைப் பேணுவதுடன் தமிழ்ப் பகுதியில் வாழும் சிங்களவரின் மொழி உரிமைகளையும் பேண வேண்டும் என அனைத்துக் கட்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.
கடந்த 18 மாதங்களாக இயங்கி வந்த அனைத்துக் கட்சிக் குழுவில், 14 கட்சிகளே இறுதிவரை பங்கேற்றன.
சிங்களப் பொதுவுடைமைக் கட்சிகள் 23-இல், அழைத்தும் 3 கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே வந்தனர்.
முக்கிய எதிர்க்கட்சியான
இரணில் விக்கிரமசிங்காவின் அய்க்கிய தேசியக் கட்சியை அழைத்தும் அது பங்ற்கவில்லை.
மகிந்த இராசபக்சேவுக்கு நாடாளுமன்றத்தில் 40 உறுப்பினர் களுடன் ஆதரவு கொடுக்கும் மக்கள் விடுதலை முன்னணியை (ஜேவிபி) அழைத்தும் பங்கு பெறவில்லை.
புத்த பிக்குகளின் கட்சி பங்கேற்றது.
முஸ்லிம் கட்சிகளை அழைத்தும் அவர்களுள் இரு கட்சிகளே கலந்து கொண்டன.
மலையகத் தமிழர் கட்சிகளை அழைத்தும் அவர்களுள் 4 கட்சிகளே பங்கு கொண்டன.
தமிழர் கட்சிகள் பலவுள், 17 நாடாளுமன்ற உறுப்பினரைக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பைப் கலந்து கொள்ள அழைக்க வுமில்லை, கருத்துக் கேட்கவுமில்லை. விடுதலைப்புலிகளுடன் ஒத்துப் போகிற அவர்கள் தாமாகப் பங்கு பெறவுமில்லை, வெளியிலிருந்து கருத்துச் சொல்லவுமில்லை.
விடுதலைப்புலிகளுக்கு எதிர்முகாமில் உள்ள தமிழர் கட்சிகள் பலவுள், நாடாளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்பினரைக் கொண்ட ஈழ மக்களாட்சிக் கட்சி மட்டும் பங்கேற்றது. தமிழர் விடுதலைக் கூட்டணியோ (ஆனந்தசங்கரி), தமிழீழ விடுதலைக் கழகமோ (சித்தார்த்தன்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோ (ஸ்ரீதரன், வரதராசப்பெருமாள்) பங்கேற்கவில்லை.
கலந்து கொண்ட 14 கட்சிகளும் ஏதோ ஒரு வகையில் ஆளும் கட்சியைச் சார்ந்திருப்பன, ஆளும் கட்சிக்கு ஆதரவு கொடுப்பன.
எனவே, இந்தக் குழு அனைத்துக் கட்சிக்குழு என்பதைவிட, ஆளும் கட்சிக் குழு என்பதே பொருத்தமானது.
புதிதாக எதையும் இக்குழு பரிந்துரைக்கவில்லை.
ஏற்கனவே, சிங்களப் பகுதிகளில் ஏழு மாகாணங்களில் நடைமுறையில் உள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்பு விதிகளை, 1989 முதலாக இந்நாள் வரை தமிழ்ப் பகுதிகளில் நடைமுறையில் இல்லாத 13-ஆவது அரசியலமைப்புத் திருத்தத்துடன் சேர்த்துத் தமிழ்ப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்துமாறு பரிந்துரைத்திருப்பது வேடிக்கை.
இந்திய - இலங்கை 1987 உடன்பாட்டிலுள்ள வட -கிழக்கு இணைப்பை மீள ஏற்படுத்துமாறு இக்குழு பரிந்துரைக்கவில்லை.
1987இலேயே 13-ஆவது திருத்தம் போதுமான அரசியல் ஏற்பாடல்ல எனக் கூறிய விடுதலைப்புலிகள், இன்று வரை அந்த நிலையிலிருந்து மாறவில்லை. அதனால்தான், தமிழீழ மக்கள் விடுதலைப்புலிகளைத் தம் ஒரே அரசியல் பிரதிநிதியாகத் தமிழீழத்தில் சிங்கள அரசு நடத்திய, கடந்த மூன்று தேர்தல்களிலும் உறுதி செய்தனர். தமிமீழ மக்கள் தொடர்ந்து ஏற்க மறுத்த அதிகாரப் பகிர்வுத் திட்டத்தையே தமிழ் மக்கள்மீது இக்குழுவின் பரிந்துரைகள் திணித்துள்ளன. குழு அறிக்கை வந்த (23.1.2008 அன்றே) உடனேயே, இப்பரிந்துரைகள் ஏற்புடையன அல்ல என விடுதலைப் புலிகளும், தமிழ்ப் பகுதிகளில் தேர்வான 17 நாடாளுமன்ற உறுப்பினர் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பும் கூறியுள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆனந்தசங்கரியின் கட்சி, சித்தார்த்தனின் கட்சி, சிறீதரனின் கட்சி, வரதராசப் பெருமாளின் கட்சி, பரந்தன் இராசனின் கட்சி, விக்கினேசுவரனின் கட்சி யாவும் ஒரே குரலில் இந்தப் பரிந்துரைகளை ஏற்க மறுத்ததுடன், இப்பரிந் துரைகளின் அடிப்படையில் எழும் அமைப்புகளில் பங்கேற்க மாட்டோம் எனத் தெரிவித்துவிட்டன.
தந்தை செல்வா, ஜீ.ஜீ. பொன்னம்பலம் காலத்தவரான ஆனந்தசங்கரி இப்பரிந்துரைகளைப் பற்றிக் குடியரசுத் தலைவர் மகிந்தாவிடம் 23.1.2008 அன்று கூறியவை கருத்தாழமுள்ளவை. வெட்டுக் காயப் புண்ணாகச் சிங்களவர் தமிழர் பிரச்சினை இருந்த காலத்தில் 13-ஆவது திருத்தம் ஆறுதல் மருந்தாக இருந்திருக்கலாம். இப்பொழுதோ நோய்முற்றி, புற்றுநோய் போலத் தெரியும் நிலை வந்த பின், அந்த மருந்து எதற்கும் பயன்படாது என்றார் ஆனந்தசங்கரி.
தமிழர் தரப்பில் - டக்ளஸ் தேவானந்தாவைத் தவிர, யாவரும் இந்தப் பரிந்துரைகள் அமைதியை நோக்கியன என்பதை ஏற்க மறுத்துள்ளனர். சிங்களவர் தரப்பில் ஆளும் கட்சியைச் சார்ந் தொழுகும் கட்சிகள் மட்டுமே இப்பரிந்துரைகளுக்கு ஆதரவாக உள்ளன.
1987-இல் இலங்கை இந்திய உடன்பாட்டை வன்மையாக எதிர்த்த சுதந்திரக் கட்சி, இப்பொழுது ஆளும் கட்சியானதும் கருத்தை மாற்றியதன் அரசியல் நோக்கம் கேள்விக்குறியானது என்கிறார் - இப்பொழுது எதிர்க்கட்சியில் உள்ள ரணில். உலக நெருக்குதலுக்குச் சப்பைக் கட்டுக் கட்டவே ஆட்சியினர் ஒத்தூதுவதாகவும் வித்தை காட்டுவதாகவும் ரணில் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
உலக நாடுகள் எதுவும் இதுவரை இப்பரிந்துரைகளைப் பற்றிக் கருத்துரை சொல்லாத நிலையில், இந்த முயற்சியை வரவேற்பதாக இந்திய அரசு கூறியிருப்பது கடுமையான ஏமாற்றத்தைத் தருகிறது. இன்றைய இந்திய அரசானது தமிழ்நாட்டின் 40 நாடாளுமன்ற உறுப்பினரின் பங்களிப்புடன் செயல்படும் அரசு. இந்திய அரசு தெரிவிக்கும் கருத்தானது இந்த 40 நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தாகவே கொள்ளப்படும்.
இலங்கை அரசின் அதிகாரப் பகிர்வுத் தீர்வை அங்குள்ள டக்ளஸ் தேவானந்தா தவிர, வேறு எந்தத் தமிழீழக் கட்சியும் ஏற்காத நிலையில், உலகத் தமிழர் எவரும் ஏற்பார்களா? இந்த நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுவை மக்களின் கருத்தாக இந்திய அரசின் கருத்தைச் சிங்கள அரசு கருத இடமுண்டல்லவா?
தமிழ்நாடு மற்றும் புதுவை நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்தைக் கேட்காமல், ஈழச்சிக்கலில் இந்திய அரசு தன்னிச்சையாகக் கருத்துக் கூறுவது கூட்டணி ஆட்சித் தர்மமா?
ஈழத் தமிழர்கள், அவர்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் ஏற்கக் கூடிய அரசியல் தீர்வு மட்டுமே தமிழக மற்றும் புதுவைத் தமிழருக்கு ஏற்புடையதாகும். இதை டில்லியில் உள்ளவர்கள் புரிந்து அதற்கேற்ப ஈழச் சிக்கலைத் தீர்க்கும் வழிகளை வரவேற்பதும் ஆதரிப்பதும் கடமை. சிங்களத் தலைமையின் ஏமாற்று வித்தைக்கு அடிபணிவது சிங்கள அரசின் தமிழின அழிப்புக் கொள்கைக்கு தமிழகம் புதுவை உள்ளிட்ட இந்தியா ஆதரவு தருவதாகவும் உலகம் கருத இடமுண்டு. எனவே ஏமாறக் கூடாது. எச்சரிக்கை தேவை! உண்மைன தீர்வு அல்ல - இப்பொழுது ராஜபக்சேயிடம் கொடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள்.

கி. வீரமணி
ஆசிரியர்