கவிதை
பிள்ளையார் சுழி
- த.ரெ.தமிழ்மணி, திருவாரூர்
பிள்ளையார்
சுழிபோட்டு
செயல் எதுவும் தொடங்கு
இங்கே - பிள்ளையார்
தமிழனைப் பலிபோட்டு
செயலைத் தொடங்கியிருக்கிறது.
இம்முறை
கணேசனுக்குச் சரணம்
பல்லக்கு - தேங்காய் உடைப்பு -
இலட்சம் தமிழர்கள் ஊர்வலம் -
எதுவுமில்லை.
தமிழனுக்கு கோவிந்தா -
பாடை -
ஒகேனக்கல் உடைப்பு - என
இந்துத்துவாக்கள்
இழுத்துச் செல்கிள்றன.
இப்போதெல்லாம்
பிள்ளையார்கள் - குளக்கரையில் அமர்ந்து
குலத்தைத் கற்பிப்பதோடு நின்றுவிடுவதில்லை
ஆற்றுநீர் திருட்டோடு
ஒகேனக்கலையும்
திருடவருகின்றன...
கர்நாடகப் பிள்ளையார்கள்.
எந்த கட்சியோடும்
கூட்டணிக்குத் தயார் என இளித்து
தமிழன் கால்வாயைத்
தடுக்கின்றன...
தமிழகம் வந்த பிள்ளையார்கள்.
அய்யப்பன்களை நம்பி வீரப்பன்களைக் காவு கொடுக்கவும் -
வாக்காள பெருமக்களே என்றால்
நகத்தில் மை வைத்துக் கொள்ளவும் -
ஆட்காட்டி விரல்களுக்கு
பயிற்சி தருகின்றன இந்தப் பிள்ளையார்கள்.
பிள்ளையார்களுக்கு
வாகனம் மாறிவிட்டது; ஆயுதம் மாறிவிட்டது
சூலத்தின் நுனியில் இரத்தம்.
நாமும் மாறுவோமா...
ஆட்காட்டி விரல்களுக்கு
ஆயுத விரல் என்று பெயர் வைப்போம்!
இனி - பிள்ளையாரைப்
பலிபோட்டு
செயல் எதுவும் தொடங்குவோம்!
புதுப்பாக்கள்
புளுகுகள்

சிவன் சடாமுடியில்
சந்திரன் குடி இருக்கிறான்
என்ற புளுகு
சந்திரனில் ஆம்ஸ்ட்ராங்
இறங்கியதுமே
வெளிப்பட்டு
வெளிச்சத்திற்கு வந்தது.
கைரேகைகள் மனிதனின்
கால ஓட்டத்தைக்
கணிக்கின்றன என்றால்
கைகளில்லாதவன்
கால்களால் -
தேர்வெழுதித் தேர்வது எப்படி?
- பாவலர் அறிவரசன், திருலோக்கி
அடடே
மூத்திரம் வரை
உறிஞ்சிய பின்பு
கோமாதா ஆனது
பசு பார்ப்பானுக்கு!
நள்ளிரவில்
பெற்ற சுதந்திரம்
விடியல் கட்டுப்பாட்டில்
இல்லை மட்டுமே
இருக்கின்றது
இளமையில் வறுமை
ஆயுதங்கள் அலுத்துக்
கொள்கின்றன
எப்போது சமாதானமாகும்
எல்லை சண்டைகள்
இரவுகளை விற்று
பகலினை வாங்கினாலும்
விடியல் மட்டும் விடிவதே
இல்லை விலைமாதுவுக்கு
மூன்றாம் பாலினத்தை
உண்மையாய்
சாத்தனாக்குகிறார்கள்
பொய்யாய்
கடவுளாக்குகிறார்கள்
கண்ணெதிரே காட்சி
அன்பே
கடவுள்!
- வீ. சிவசங்கர், கள்ளக்குறிச்சி
புதுப்பாக்கள்

நடிகைகளும்
தோற்றுபோய் விடுகிறார்கள்
சிலைகளிடம்
கவர்ச்சி உடை அணிவதில்...
இருந்ததை இடித்துவிட்டு
இல்லாததற்கு சண்டையிடுகிறார்கள்
பகுத்தறிவற்ற இந்த மனிதர்கள்...
நாரதர் வேலையை
நன்றாகவே செய்கிறார்
இராமர்....
மீண்டும் நிரூபித்து விட்டார்
இராமர்
தேசத்தின் ஒற்றுமையை
என்னால் மட்டுமே
சீரழிக்க முடியும் என்பதை
சேது சமுத்திரத் திட்டத்தில்...
- அ. குருஷ் ராஜா, இனாம்ரெட்டியபட்டி

உண்டியலில் நான்
காசு சேர்ப்பதில்லை
நாணயங்களைக்
கூட
கூண்டில் அடைக்க
விரும்பாததால்!
ஊமை ஊதிய
புல்லாங்குழலால்
ஊரே
ஊமையானது
தன் காதலனை விட்டு
பிரியக் கூடாது
என வேண்டி
கோவில் மணியை
அடித்தாள்
கோபுரத்தின் மேல்
காதலித்துக் கொண்டிருந்த
புறாக்கள் பிரிந்தன
- பெவிக்ஸ் ராபின்சன், புதுவை |