பிரிட்டிஷ் அரசின் மனித நேயம்-நீதி:நமது மத்திய அரசு காட்ட வேண்டாமா?
பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகள் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள்மீது சட்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தொடரவேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளின் அண்மைத் தீர்ப்புகளும்கூட, பாபர் மசூதி இடிப்புக் குற்றவாளிகளை விடுவித்துவிடவில்லை என்பதை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி. சோனியா காந்தி சுட்டிக்காட்டியுள்ளது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., விசுவ இந்து பரிஷத், பஜ்ரங் தள் மற்றும் காவிச் சாமியார்கள் அமைப்பு இவைதான் இடித்த குற்றவாளிகள் என்பதற்கு ஏராளம் ஆதாரங்கள் உண்டு - படங்கள் உள்பட.
அதைவிட முக்கியம் - நாங்கள்தான் இடித்தோம்; அது அவமானச் சின்னம் என்று பகிரங்கமாக ஒப்புதல் வாக்குமூலம் தந்தவர்கள் இந்த அமைப்பு-களைச் சார்ந்த பலர். இன்னமும் சட்டமும், நீதியும் ஊமையாகவே உள்ளன!
பல கோடி ரூபாய்களைச் செலவழித்து நடந்த ஜஸ்டீஸ் லிபரான் விசாரணை ஆணைய அறிக்கை வெளிவந்து, அதன்படி குற்றவாளிகளாக்கப்படும் நபர்களைக் கூண்டில் ஏற்றி, நீதி விசாரணை நடத்தி - ஏற்கெனவே கிரிமினல் வழக்குகள் உள்ள - அயோத்தி காவல் துறை அதிகாரிகள் உள்பட பலரின் சாட்சியங்-களும் உள்ளன. தண்டிக்கப்-படுவதற்கான அதிக சட்ட நிர்ப்பந்தம் - நியாயத் தேவை உள்ளது.
இதனைக் காங்கிரஸ் தலைமை வற்புறுத்தியுள்ளது. இதில் எதிர்க்கட்சியுடன் ஆளுங்கட்சி எந்தவித சமரசப் போக்கையும் கைக்கொள்ளவில்லை என்பதை நாட்டிற்குத் தெளிவுபடுத்தி உள்ளது வரவேற்-கத்தக்கதே!
இது சம்பந்தமாக மேலும் காலதாமதம் காட்டாது, மத்திய அரசின் உள்துறை உடனடியாகக் கவனஞ்செலுத்தி, குற்றவாளிகளுக்குத் தக்க தண்டனையை வாங்கித் தரவேண்டியது - நீதி செத்துவிடாது என்று காட்டுவதற்கு மிகவும் இன்றியமையாதது ஆகும்.
மற்றொரு செய்தி. இங்கிலாந்துக்குப் பயணமாக இருந்த இலங்கை அதிபர் ராஜபக்சே அங்கே போனால், தனது நாட்டில் பல லட்சக்கணக்கான தமிழர்களை இனப் படுகொலை செய்து தீவிரவாத ஒழிப்புப் போர்வையில், அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்தும், தமிழ்ப் பெண்களின் மானத்-தையும், கற்பையும் சூறையாடியதோர் நிலைக்கு மூலகாரணமாக இடி அமீனாக இருந்தார் என்பதால், போர்க் குற்றவாளியாக அய்ரோப்பிய யூனியன் நாடுகளால் கருதப்படுவார்; எனவே, எங்கே தன்னைக் கைது செய்து சிறையில் அடைத்து விடுமோ பிரிட்டிஷ் அரசு என்று அஞ்சி, அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டார் என்ற செய்தி, ஈழத் தமிழர் வாழ்வுரிமையைப் பறித்தவர்கள் என்றாவது ஒரு நாள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்-பட்டு, சட்டத்தினால் தண்டிக்கப்படுவர் என்ற இயற்கை நீதியைச் சுட்டிக்காட்டுவதாக அச்செய்தி அமைந்துள்ளது! இவ்வச்சமே அவமானம்தானே!
பாபர் மசூதியை இடித்தவர்களுக்குத் தண்டனை வழங்கவேண்டும் என்று கூறும் மத்திய அரசின் கூட்டணி ஆட்சித் தலைவரும், காங்கிரஸ் கட்சித் தலைவி திருமதி சோனியா அவர்களும், அதே பிரிட்டன் உள்பட பங்கு கொண்ட டில்லி காமன்வெல்த் விளையாட்டு நிறைவு விழாவிற்கு, தமிழினப் படுகொலையாளன், சிங்கள வெறியன் ராஜபக்சேவை முக்கிய விருந்தினராக அழைத்தது எவ்வகையில் நியாயம்? மனிதாபிமானத்தை டில்லி விரித்த சிவப்புக் கம்பளத்தின் கீழே போட்டு மிதித்ததோர் அநியாயச் செயல் அல்லவா!
இந்த இரட்டை நிலையை காங்கிரஸ் கட்சியோ, மத்திய அரசோ எப்படி நியாயப்-படுத்த முடியும்? இதுபற்றிய குமுறல் - தமிழ்நாட்டுத் தமிழர்களில் தொடங்கி, உலகத் தமிழர்கள்வரை உலகம் முழுவதும், பரவலாக உள்ளதே, அதுபற்றி அலட்சியம் காட்டலாமா?
பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் எனது (சிங்கள) அரசு போர் தொடுக்கிறது என்று கூறி, பல லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்து, அஞ்சிய அப்பாவி மக்களை இன்னமும்கூட முள்வேலிக்குள் அடைத்து, கொடுமைக்கு ஆளாக்கும் நபரை அழைத்து விருந்து கொடுப்பதைவிட, தமிழர்களின் உணர்வை அலட்சியப்படுத்திய செயல், மனிதநேயத்தை மரணப் படுகுழியில் தள்ளிய செயல் வேறு உண்டா?
தமிழர்கள் நெஞ்சங்களில் வடியும் ரத்தக் கண்ணீர் வீணாகிவிடாது. ஆற்றாது அழுத தமிழர்களின் கண்ணீர் அது!
இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை நாளும் கொடுமைப்படுத்துவது அன்றாட அவலமாகிவிட்டதே!
நம் மக்கள் வரிப் பணம், நன்கொடை இவைமூலம் தமிழக அரசு, மத்திய அரசு கொடுத்த பல நூறு கோடிகளைப் பெற்ற சிங்கள ராஜபக்சே அரசு உண்மையில் ஈழத் தமிழர் வாழ்வுரிமை மீட்புக்குச் செய்த தென்ன?
இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வசித்த தமிழர்களின் வீடுகள், காணிகளில் சிங்களக் குடியேற்றம் திட்ட-மிட்டு நடத்தப்பெறும் நிலைதானே இன்றும் தொடருகிறது?
இந்திய அரசு இதுபற்றி தட்டிக் கேட்டால், சுண்டைக்காய் நாடு ஓரளவு திருந்தியாவது நடக்க வாய்ப்பு ஏற்படுமே, செய்யவில்லை ஏன்? அவர்கள் எம் இனமில்லை; ஆகவே, எமக்கு மனமில்லை என்று எண்ணுகிறாரோ என்ற நியாயமான சந்தேகம் தமிழர்களின் உள்ளங்களில் பீறிட்டுக் கிளம்புகிறதே!
பிரிட்டிஷ் அரசு காட்டும் மனித நேயம், சாயாத தராசு நீதி - நமது மத்திய அரசு காட்டவேண்டாமா?
இனியாவது வற்புறுத்தி வாழ்வுரிமைக்குக் காப்புக் கேட்கட்டும்!
- கி.வீரமணி, ஆசிரியர்