Home | Contact us
 

ஆகஸ்ட்16-31_2010


புதுப்பாக்கள்

கழித்தல்

பொழுது கழிப்பதாகச்
சொல்பவனைக்
கழித்துக்கொண்டிருக்கிறது
பொழுது


அதுஎன்ன?

ஜனநாயகக் குழிவெட்டி
சிலகோடி முட்டையிட்டு
அண்ணாந்து பார்த்தால்
பல நூறுகோடி


தேர்தல்விதி

ஜாதித் தலைவனாகு
கட்சி தொடங்கு
தேர்தலில் நில்
கூட்டணியில் சேர்
பேரம் பேசு
படியவில்லையெனில்
தன்மானம் இழ
தாவு கட்சி
தரும்கோடிபெறு
செல்லாக் காசாய்ப் போ...

பின்புத்தி எதற்கும்
முக்கியம்
முன் யோசனை
பட்ட பிறகே
வந்து தொலைக்கிறது
காவலரைப் போல்

- செழியரசு, தஞ்சை


நடைமுறை

சமத்துவ புரங்களில்
எளியவர்கள்
சாதிகளின் கைகோப்பு

தீண்டாமை குற்றம்
தீண்டாமை பாவம்
விடுதலைநாள் விழா ஆண்டுதோறும்

மெல்லிய மகளிர்தம்
மனமலர்ச் சோலை
மூட முள்களால் கிழிபடுகிறது!

ஒரு கிரகத்தைக் காணோம்
நவக்கிரகக் கோயிலைச் சுற்றிவரும் குடும்பத்தில்!

தமிழ் வாழ்க! வெல்க!
என்றவன்,
தொலைபேசியில் ஹலோ...

அய்யப்பன்
தரிசனம்
வட்டிக்கு வாங்கி!
இருளில் குடிசைகள் ஒளித் தொகுப்பில்
அம்மன் உலா!

முதிர்கன்னி வழிபாடு!
மதுரை மீனாட்சித் திருக்கலியாணம்!

சிவனை முழுக்காட்டப்
பஞ்சாமிர்தம்
வறுமைக் கோட்டு மக்கள்.

- கோ. கலைவேந்தர், குத்தாலம்


சிரிப்பு

கேள்விக்குறியோடு
மண் சிரித்தது
மனிதனைப் பார்த்து
மவுனமாக

பேதம்

ஜாதி தெரியவில்லை
கண்
தானம் கிடைத்தபோது
பேதம் பார்க்கின்றன
அதில்
பார்வை கிடைத்தபோது

- மணக்காடு ஜெயச்சந்திரன்


வேண்டுதல்

கோவிலுக்குச் சென்று
நல்லபுத்தி வேண்டுமென
வேண்டிக் கொண்டவள்
வீட்டிற்கு வந்தவுடனே
மாமியாரைப்
போட்டுக்கொடுத்தாள்
கணவனிடம்....!

இயேசுவின் புலம்பல்

மானிடர்களே....
பாவம் செய்வதை நிறுத்துங்கள்....
சிலுவையை என்னால் சுமக்க
முடியவில்லை...!

பிரார்த்தனை

எதைத் தேடுகிறார்கள்?
வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு....!

பக்தி மாலை

முருகனுக்கு மூணுதடவ
அய்யப்பனுக்கு அஞ்சுதடவ
அம்மனுக்கு ஆறுதடவ
மாலைபோட்ட விவரத்தைப்
பெருமையுடன் சொன்னான்...
ஏழு கொலை செய்த
ஏகாம்பரம்...!

- வெண்ணிலா மோகன், முசிறி


காவு

ஆகம விதிப்படி
இழைக்கப்பட்ட
ஆழித் தேர்
நாலு வீதியிலும்
அசைந்து அசைந்து
நிலைக்கு வரும் போது நிலை மாறியது
வேடிக்கை பார்த்த பக்தன்
வேதனையாய் இறந்தான்
கடவுளுக்கும்
காவா?

கடன்

அட்சய திருதியையில்
தங்கம் வாங்கினால்
தங்கம் பெருகும்
எந்தத் தேதியில்
பணம் கொடுத்தால்
கடன் அடையும்
உலக வங்கி,
இந்தியா

உண்மை இல்லாதவர்

அசிங்கப்பட்ட தேவநாதனும்
கேவலப்பட்ட நித்யானந்தமும்
அடிப்பட்ட கல்கியும்
ஆண்மை உள்ளவர்கள்தான்
ஆனால்
உண்மை இல்லாதவர்கள்.

வேறுபாடு

அர்ச்சனைத் தட்டில்
அய்ந்தோ, பத்தோ
தட்சணை - அய்யர்
வெளியே
அம்மா தாயே
திருவோடு

ருசி

பகவானுக்குப் படைக்க
மடப்பள்ளியில்
சர்க்கரைப் பொங்கல்
ஏன்னா
இனிப்பு
கம்மியா
இருக்கே.

- தாமரை நிலவன், திருத்துறைப்பூண்டி


நம்பிக்கை

நன்றாக நான்கைந்து முறை
அசைத்துப் பார்த்து விட்டே
அகல்கிறார்
காவல் தெய்வத்தின்
கோயில் கதவின்
பூட்டைப் பூட்டி விட்டு....
பூசாரி!

- செல்லமுத்து, மேல்மங்கலம்.

 


  Bookmark and Share