Home | Contact us
 

ஆகஸ்ட்1631_2010


ஊர் அடங்கு உத்தரவு
நாட்டுக்கு சுதந்திர தினம்

பவானந்தி

ஆகஸ்ட் 15.

63ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாட பள்ளிகளில் எல்லாம் மாறுவேடப்போட்டிகள் நடைபெறும். பள்ளிகளில் மட்டுமல்லாது பொது இடங்களில் கூட போட்டியில்லாத மாறுவேடங்கள் காணக் கிடைக்கும். நெற்றி நிறைய பட்டையடித்து பக்திக் காட்சி அளிப்பதுபோல, நமது தேசபக்த சிகாமணிகள் எல்லாம் நெஞ்சில் கொடியைக் குத்திக் கொண்டால் பீட்டர் இங்லாண்டு சட்டையில் பொத்தல் விழுமே என்ற கவலை காரணமாக பிளாஸ்டிக் உறையிட்ட கொடிகளுக்காக ஆர்டர் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சிக்னல்களில் கொடி விற்பனை முன்பை விடப் பிச்சுக்கும் என்று பத்திரிகைகள் சொல்லும். சிறப்புத் திரைப்படம் மற்றும் அய்ஸ்வர்யா ராயோ, லட்சுமிராயோ அவரவர் தரத்துக்கு ஏற்ப நடிகர், நடிகைகள் பேட்டியுடன், குண்டு துளைக்காத கூண்டுக்குள் இருந்தபடி பிரதமரின் சுதந்திர நாள் உரையோடு அமர்க்களமாக விழா நடைபெறும்... ஆனால், இதெல்லாம் எத்தனை மாநிலங்களில் என்பது தான் கேள்விக்குறி.

நாடெங்கும் எழும் உரிமைப் போராட்டங்களுக்கு மத்தியில் இவர்களின் சுதந்திர நாள் கொண்டாட்டங்கள் ஏப்ரல்1ஆம் தேதியை விடக் கேலிக் கூத்தாகத் தான் இருக்கும். தெலங்கானா தனி மாநிலம் கோரிப் பல ஆண்டுகளாகப் போராடி வரும் மக்கள் கடந்த ஆண்டு தொடங்கி பெரும் எழுச்சி பெற்று தொடர் போராட்டங்களை நடத்திவருகிறார்கள். மாணவர்களின் எழுச்சியும், தெலங்கானா மக்களின் போராட்டமும், இந்திய ஆளும் சக்திகளை கலக்கியிருக்கிறது. வடகிழக்கு மாநில மக்களின் உரிமைப் போராட்டம் நாளும் வலுவடைந்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணங்களாக இந்தியாவின் ராணுவக் கட்டுப்பாடும், அத்துமீறலும், மனித உரிமை மீறலும் இருக்கின்றன. போலி எதிர்த் தாக்குதல்கள், பாலியல் கொடுமைகள், வழிப்பறி, திருட்டு முதலியவற்றை ராணுவமே முன்னின்று நடத்துகிறது என்று செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல் இதுவரை இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூவிக் கூவி விற்றுவந்த இந்திய அரசு, ஒட்டுமொத்தமாக நியமகிரி என்ற கனிம வளம் நிறைந்த மலையையே முதலாளிகளுக்கு விற்றுவிட்டது. கோடிகோடியாய்க் கொட்டப்போகும் சுரங்கங்களை வெட்ட வேண்டுமானால், அதற்குத் தடையாக இருக்கக் கூடுமெனக் கருதிய அம்மண்ணின், மலையின் மைந்தர்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும் என முடிவு செய்த அரசு, தனது மக்களுக்கெதிரான போரை, இயற்கைக்கு எதிரான போரை அவர்கள் மீது திணித்திருக்கிறது.

தங்கள் வளத்தைக் காக்க ஆயுதம் ஏந்தியோரை மாவோயிஸ்டுகள் என முத்திரை குத்தி அழிக்கவும், அவர்களைக் காட்டிக் கொடுக்கவும், முடிந்தால் போட்டுத் தள்ளவும் சல்வார் ஜுடும் என்ற கூலிப் படையை அரசே உருவாக்கி அவர்கள் கையில் ஆயுதத்தையும் தந்து அனுப்பியிருக்கிறது. இந்த வேளையில், இந்தியாவின் 63 ஆண்டு கால சுதந்திர (?) வரலாற்றுக்கும் மேலாக, இந்தியாவுக்கு அடிமையாக்கப்பட்ட காஷ்மீரின் சுதந்திரப் போராட்ட வரலாறு இருக்கிறது. பாதுகாப்புக்கு ஆதரவு தேடி வந்தவனின் அடிக்கோவணத்தையும் உருவிய கதையாக காஷ்மீரைக் கைப்பற்றிய இந்தியா, தொடர்ந்து அம்மக்களை ராணுவத்தின் கோரப் பிடியில் அழுத்தி வைத்திருக்கிறது.

எங்களுக்கு பாகிஸ்தானும் வேண்டாம்; இந்தியாவும் வேண்டாம்; காஷ்மீர் தான் வேண்டும் என்று காஷ்மீரிகள் முழக்கம் எழுப்பும் போதெல்லாம் தீவிரவாத, அதிலும் அண்டை நாட்டு தீவிரவாத பூச்சாண்டி காட்டி அவர்களின் குரல் வளையை நெறித்த இந்திய அரசு, இப்போது என்ன செய்வதென்று புரியாமல் மக்களை வேட்டையாடி வருகிறது. பதவி உயர்வுக்காக அப்பாவி இளைஞர்களைக் கடத்தி சுட்டுக் கொன்று, ராணுவ அதிகாரிகள் நடத்திய போலி எதிர்த்தாக்குதல் அம்பலப்பட்டு, கொதித்துப் போன காஷ்மீர் மக்கள் இந்தியாவே வெளியேறு என்று உரக்கக் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆயுதம் தாங்கிப் போராடுவோரை பயங்கரவாதிகள் என்று பட்டம் சூட்டிவிடலாம். ஆயிரக்கணக்கில் வீதிக்கு வந்து போராடும் மக்களை என்ன செய்ய முடியும்? ஊரடங்கு உத்தரவு போட்டுப் பார்த்தார்கள். அதையெல்லாம் துச்சமெனக் கருதிய மக்கள் துப்பாக்கிச் சூடுகளுக்கு அஞ்சாத நெஞ்சுரத்தோடு போராடுகிறார்கள். இதுவரை நூற்றுக்கணக்கானோரை கடந்த 3 மாதங்களில் மட்டும் சுட்டுக் கொன்றிருக்கிறது இந்தியா. இப்படி மக்களின் விடுதலைப் போராட்டங்களை நசுக்க நினைத்து, அரசு பயங்கரவாதத்தினை ஏவி விட்டிருக்கும் ஒரு அரசு கொண்டாடும் சுதந்திர தினம் கேலிக்கூத்தாக இல்லாமல் வேறு எப்படி இருக்க முடியும்? இலங்கையின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியாகும் தமிழக மீனவனைப் பற்றிக் கவலையில்லாமல் இறையாண்மையைக் காப்பாற்றும் இந்தியா இந்த ஆண்டும் சுதந்திர நாள் கொண்டாடும்.

இந்த வருசம் சுதந்திர தினத்துக்கும் பாட்டெல்லாம் போட்டு டான்ஸ் ஆடுவார்களே... என்ன பாட்டு போடலாம். ஆடுவோமே பள்ளு பாடுவோமே... ஊரடங்கு உத்தரவு போடுவோமே

அதை மீறும் எம்மக்களைக் கொன்று போடுவோமே என்று ஆடுவோமே.....


  Bookmark and Share