மே 01-15_2010

பொருளடக்கம்


Contant

 

வர்த்தகச் சூதாட்டமாக மாறியுள்ள அய்.பி.எல். கிரிக்கெட்
போட்டியைத் தடை செய்க!

நாம் பல ஆண்டுகளாகக் கூறிவரும் கிரிக்கெட் என்ற மேற்கத்திய விளையாட்டை இங்கே இறக்குமதி செய்து, படிப்படியாக அந்த விளையாட்டு இப்போது, நம்பர் 1 வர்த்தக சூதாட்டமாக ஆகி, கறுப்புப் பணம் - ஊழல், லஞ்சம், மகளிரைக் கொச்சைப்படுத்தும் பல இழுக்குகள் - இவைகளின் புகலிடமாக்கப்பட்டு வந்துள்ள நிலையில், அதன் அச்சு முறிந்து, வண்டியே குடை சாய்ந்து விழும் நிலை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது.

கால்பந்து, கைப்பந்து, கபடி என்ற சடுகுடு போன்ற சிறந்த உடற்பயிற்சி, மனவளப் பெருக்கத்திற்கு வழிவகை செய்யும் ஆட்டம் அல்ல இது. இதுபற்றி அறிஞர் பெர்னாட்ஷா அவர்கள் அது எந்த நாட்டிலிருந்து கிளம்பியதோ அந்த நாட்டவர் கூறியதைவிட அப்பட்டமான உண்மையை யாரும் கூறிவிடமுடியாது!

இது சோம்பேறி விளையாட்டானபோதிலும் பல்வேறு நாடு களுக்கிடையே ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறைதான் நடக்கும். அதுவே அண்மைக் காலத்தில் லஞ்சம், ஊழல், சூதாட்டம் மேல்பந்தயம் போன்றவைகளுக்கு வழி வகுத்தது; சில ஆண்டுகளுக்குமுன் முடைநாற்றம் வீசுவதாக அமைந்தது!

அதனால் அதன் மீதுள்ள மோகம் ஓரளவு குறைந்தது. மீண்டும் அய்.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக்) என்று பல நாடுகளில் உள்ள கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுடன் ஒப்பந்தம், சம்பளம், பங்கு பேசி, பல கம்பெனிகளாக்கி, எளிய, நடுத்தர மக்களைச் சுரண்டி கொழுக்கின்றன!

மதுபோதையை விட ஆபத்தான போதை இது என்பதற்கு இன்று வந்துள்ள ஒரு செய்தி: தனது பாட்டியிடம் கிரிக்கெட் பார்க்க பணம் கேட்ட இளைஞனுக்கு அவர் பணம் தரவில்லை. அதனால் கிரிக்கெட் பார்க்கப் போக முடியவில்லை என்ற ஆத்திரத்தினால், வயதான அப்பாட்டியை அடித்தே கொன்றுவிட்டு, இன்று சிறையில் வதைகிறது அந்த சின்ன மொட்டு! என்னே கொடுமை!

போதை மருந்து வாங்க பணத்திற்காக கொலைகள் சர்வசாதாரணமாக நடைபெறுவது போலத்தானே இதுவும்!

இந்த அய்.பி.எல். என்ற சூதாட்டக் கம்பெனிகள்மூலம் எந்த அளவு அருவருக்கத்தக்க ஆபாசங்கள் நடைபெறக்கூடும் என்பதற்கு சசிதரூர் என்ற கேரளப் பார்ப்பனர் ஆடிய நாடகமே சான்று! 70 கோடி ரூபாய் தன்னுடன் 3 ஆவது திருமணத்திற்கு ரெடியான காஷ்மீர் அழகு நிலையப் பெண்மணி சுனந்தா புஷ்கர் கதை ஒன்றே போதாதா?

இப்போதாவது நமது மத்திய ஆட்சியின் கண்கள் திறந்து, வருமானவரித்துறை பாய்ந்துள்ளதே. அது ஓரளவுக்கு, பொது ஒழுக்கச் சிதைவுபற்றிக் கவலைப்படுவோருக்கு ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது!

நாடாளுமன்றத்தில் லாலு பிரசாத், முலாயம்சிங், சரத் யாதவ், குருதாஸ் குப்தா (சி.பி.அய்.), டி. ராஜா முதலிய தலைவர்கள் விடுத்த கோரிக்கை வரவேற்கத்தக்கது! நாம் நீண்ட காலமாக வற்புறுத்தி வந்த கோரிக்கை.

இந்த அய்.பி.எல். கிரிக்கெட் தடை செய்யப் படவேண்டும்! கிரிக்கெட் வாரியத்தின்மூலம் பல ஆயிரக்கணக்கான கோடிகள் புரண்டு, கறுப்புப் பணமாகி, எங்கோ ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது நாடறிந்த ரகசியம் ஆகும்!

மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் எம்.எஸ்.கில். அவர்களே கிரிக்கெட் இப்போது விளையாட்டல்ல, சூதாட்டம், வர்த்தக பேரமே என்று மனம் வெறுத்துக் கூறியுள்ளதைவிட வேறென்ன சான்றிதழ் தேவை?

கிரிக்கெட் ஆட்டத்தில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் நடக்கும் இரவு ஆட்டத்திலும் ரசிகர்கள் கலந்துகொள்ளலாம்!

கிரிக்கெட் வீரர்கள், நடிகர், நடிகைகள், கவர்ச்சிக் கன்னிகளுடன் பேசலாம். ஆடலாம், கொண்டாடலாம்! வகை வகையான உணவு விருந்துடன் வயிறு முட்டக் குடிக்கலாம்! இசை நிகழ்ச்சியுடன் தேசிய அளவிலான முன்னணி கவர்ச்சிக் கன்னிகளின் ஃபேஷன் ஷோவும் தினசரி உண்டு. ஒரு போட்டிக்கு விலை அதிகார பூர்வமாக ரூ.35,000 (ஆனால் நிஜத்தில் 50 ஆயிரம் ரூபாய்) என்று சொல்லப்படுகிறது. செமி பைனல்ஸ், ஃபைனல்சுக்கு ஒரு டிக்கெட்டின் விலை தற்போதைய நிலவரப்படி 1,27,000 (ஒரு லட்சத்து இருபத்து ஏழாயிரம் - மேலும் அதிகரிக்கலாம்!) முதல் போட்டியிலிருந்து கடைசி போட்டிவரை இந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் செய்யலாம். அதற்கு ஒரு டிக்கெட்டின் விலை 5.5 லட்சம். வாழ்க அய்.பி.எல்., வளர்க அதன் கலாச்சாரம். என்று தினமணி நாளேட்டில், கார்ட்டூனிஸ்ட் மதி அவர்கள் ஆட்டம், பாட்டம், சூதாட்டம் என்று அரைப்பக்கக் கார்ட்டூன் படத்தில் எழுதியுள்ளார்!

வறுமைக் கோட்டுக்குக்கீழே உள்ள மக்கள் ஏறத்தாழ 30 கோடிமுதல் 50 கோடிவரை உள்ள நம் நாட்டில் இப்படிக் கூத்தடிப்பா?

இளைய தலைமுறை முதல் முதியவர்வரை பலரையும் இந்த சூதாட்டம் விட்டதாகத் தெரியவில்லை. வயதானவர்கள் எப்படியோ போகட்டும். ஆனால், இளந்தளிர்கள் காப்பாற்றப்பட வேண்டாமா?

எனவே, நாம் திராவிடர் மாணவர் கழக எழுச்சி மாநில மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானத்தைச் செயலாக்கத் தக்க தருணம் இதுதான் (Save or yoh movemen).
1. இந்த அய்.பி.எல். கிரிக்கெட்டினை அறவே அரசு தடை செய்யவேண்டும், உடனடியாக.

2. கிரிக்கெட் வாரியம் பல கோடி வருவாய் தருவது என்பதால் அதனை அரசே எடுத்து நடத்த முன் வரவேண்டும்.

இதுபோன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து நாடு தழுவிய பிரச்சார இயக்கத்தினை திராவிடர் கழகம் விரைவில் மே மாதத்தில் தொடங்கி நடத்தவிருக்கிறது!

பொது ஒழுக்கச் சிதைவினை சாமியார்கள் சங்கராச்சாரி முதல் நித்தியானந்தா வரை போப்பாண்ட வர்களின், கன்னியாஸ்திரீகளின், பாதிரிகளின் ஓரினச் சேர்க்கை போன்ற ஒழுக்கங்கெட்ட செயல்கள்வரை எல்லாம் எதனைக் காட்டுகின்றன?

கடவுள் பக்தி, மத உணர்வுகளால் பொது ஒழுக்கத்தை ஆன்மிக வேடம் போட்டுக் காப்பாற்ற முடியாது, அறிவு ஒளியினால்தான், சுயமரியாதைச் சூரணத்தால் மட்டுமே பொது ஒழுக்கம் (குறள் நெறி என்பதும் சுயமரியாதை நெறி என்பதும் ஒன்றுதான்) காப்பாற்றப்பட முடியும். இதுபற்றி பல ஊர்களிலும் தீவிரப் பிரச்சாரம் அடை மழை போல் இந்தக் கோடையில் நடைபெற்றாக வேண்டும்.

ஒழுக்கமிலார் ஏதிருந்தும் இல்லார் - புரட்சிக் கவிஞர்.

- கி.வீரமணி
ஆசிரியர்

 
print
send to friend
Home | Viduthalai | The Modern Rationalist | Periyar Pinju | Periyar Webvision | Periyar Matrimonial | Periyar childrenhome